சென்னை, ஏப்.14: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பேசியதாவது: தென் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெம்மேலியில் 100 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது. மேலும், நெம்மேலியில் 150 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு கேஎப்டபுள்யூ மூலம் நிதி பெற மத்திய அரசு இசைவு கொடுக்க பாராளுமன்றத்திலும், மத்திய நகர்புறத்துறை அமைச்சர்களையும் தொடர்ந்து வலியுறுத்தி இசைவு பெற்று அத்திட்டத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
பேரூரில் 400 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ₹6,078 கோடியில் செயல்படுத்த ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. நான், தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் சோழிங்கநல்லூர் வருவாய் தாலுகா சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. எனது தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வார்டு, மண்டலம் வாரியாக அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு தெரு, தெருவாக நடந்தும், குறைதீர்க்கும் முகாம் நடத்தியும், மக்களின் குறைகளை போக்கும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் செய்ய ₹1.5 கோடியில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.